Monday, June 1, 2015

வாஸ்து பகவான் வரலாறு





வாஸ்து என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்தது. வாஸ்தி என்ற லத்தீன் சொல்லுக்கு வசிப்பிடம், வளமான இடம் உண்மையானது, மங்களகரமானது என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்ந்திட வசிப்பிடத்தில் மனைவியை அன்பு மயமாக்குவதால் இல்லறம் இனியதாக அமையும்.

வாஸ்துவை வணங்கி வலப்படுத்துவதால் இல்லம் செல்வச் செழிப்போடு திகழும். அவரது திருக்கதையைப் படித்தறிவோமா? ஒரு காலத்தில் அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே போர் ஏற்பட்டபோது சிவபெருமானது வியர்வையில் இருந்து வெளிப்பட்டு அந்தகனை விழுங்கியது.

சில காலங்கள் கழித்து சிவனிடம் பெற்ற வரத்தால் அதிக பலம் கொண்டதாகி உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக்கண்டு வருத்தமடைந்த சிவபெருமான் வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கச் சொல்ல அவன் அசுரனை அடக்கிக் கீழே தள்ளினான். குப்புற விழுந்த அசுரன் வடகிழக்காகத் தலை வைத்து விழுந்து விட்டான்.

மீண்டும் அவன் எழுந்திருக்காமல் இருக்க தேவர்களை அவன் மேல் வசிக்கும்படி செய்தான். அவன் உலகையே விழுங்க முற்பட்டபோது பூமி வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தனர். தேவர்களது பாதங்கள் பட்டதால் புனிதத்துவம் பெற்ற அந்த அசுரன் மனிதர்களால் பூஜை செய்யும் தெய்வத்தன்மையைப் பெற்றான்.

பூமியின் அதிபனாக வாஸ்து பகவான் என்ற பெயரைப் பெற்று பூமி, மனை தொடர்பான தொடக்க நிகழ்ச்சிகளுக்கு உன்னை வணங்கி விட்ட பிறகே மற்ற பணிகளைத் தொடங்குவார்கள் மக்கள் என்று ஈசன் ஒரு சிறப்பை அருளினார். இந்த வாஸ்து ஒரு ஆண்டுக்கு 8 முறை உறக்கத்திலிருந்து எழுகிறார். பூஜை முடிந்ததும் மறுபடியும் படுத்து உறங்குவார்.

மரீசி மகரிஷி தந்த விமான அரச்சனை பூஷ்பம், மயன் பதம், சில்பரத்னம், சிற்ப நகரம், காஸ்யபம், சர்வார்த்த சாகரம், வாஸ்து வித்யா, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, வாஸ்து பிரதிட்டா அங்கம், வாஸ்து பூமி க்ரியா கல்பம் ஆகிய நூல்கள், வீடு, கட்டிடம் கட்டும் கலை ஆகியவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லும் இந்த நூல்களாகும்.

வாஸ்து பூஜை என்பது எளிதாகப் புரிந்து கொண்டு நிறைவான பலன் பெறும் ஒரு பாரம்பரியக் கலையாக போற்றப்படுகிறது. வாஸ்துவின் பூஜை மற்றும் அருளும் ரகசியங்களை அறிந்து பலன் பெறுவோமா!



நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் 'ஸ்தாபத்திய வேதம்’ என்ற பகுதியில், 'வாஸ்து சில்ப சாஸ்திரம்’ என்ற தலைப்பில் வீடுகளை, கட்டடங்களை வடிவமைப்பதும் கட்டுவதும் தொடர்பான அறிவியல் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.வேதங்களின் ஆழ்ந்த ஞானமும் கண்ணோட்டமும் பலராலும் பாராட்டப்பட்டவை. மேலை நாட்டினர் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயத் துவங்குவதற்கு முன்பே நம் முன்னோர் அதுபற்றிய உயர்வான ஞானத்தைப் பெற்றிருந்தனர். அவற்றில் ஒன்றே வாஸ்து சாஸ்திரம் ஆகும். அனைத்து மக்களும் தங்கள் இருப்பிடங்கள் மூலமாக வாழ்க்கையில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கமாகும். இகலோக சுகத்தையும் பரலோக சுகத்தையும் இந்த சாஸ்திரங்களின் மூலம் எளிதில் பெறலாம் என (வராஹமிஹிரர் வாஸ்துவில்) மகரிஷி நாரதர் கூறுகிறார்.
அனேன விதின சமயாக
வாஸ்து பூஜாம்கரோதி; யா
ஆரோக்யம் புத்ரலாபாம்
சாதனம் தான்யம் லபேன்நர:

எவன் ஒருவன் வாஸ்வை முறையாக மதிக்கிறானோ அவன் திரண்ட செல்வத்தையும், குடும்ப வாரிசுகளையும், சொத்துக்களையும், இகபர இன்பங்களையும் தவறாமல் அடைகிறான். வாஸ்து சாஸ்திரத்தை கடைப்பிடிக்காதவர்களுக்கு மனைவியின் மூலம் துன்பங்கள், வாரிசு இழப்புகள், சொத்துகள் அழிதல், மனக்குழப்பம், நோய்கள் என எண்ணற்ற துன்பங்கள் தாமே வந்து சேரும் என்று நாரத மகரிஷி விளக்குவதாக வராஹமிஹிரரின் வாஸ்து சாஸ்திரம் விவரிக்கிறது.
தகுந்த விகிதாசாரத்திலான பஞ்சபூதங்களின் சேர்க்கையே வாஸ்து.
இதில் நம்மால் செயல்படுத்த சாத்தியமான நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றையாவது முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண வேண்டும்.
'விஸ்வகர்மா பிரகாஷ்’ என்னும் பழைமையான நூல் கீழ்க்காணும் விளக்கத்தைத் தருகிறது...
இதம் பவித்ரம் பரம்
ரகஸ்யம் ய: படேன்னர:
ஸ்யாத ஸ்யாவித தா வாணி
சத்யம் சத்யம் வதாப்யஹம்.

மனிதர்கள் இந்த அற்புதமான, நிச்சயமாக பலன் கொடுக்கும் வாஸ்து சாஸ்திரத்தை, சாஸ்திரப் புத்தகங்களை நன்கு படிப்பதன் மூலமும், முறையாக அனுஷ்டிப்பதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம். அப்படி படித்தறிந்து கடைப்பிடிப்பவர்களின் வாக்குகள் நிச்சயம் பலிக்கும். அவை, அவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். ஒருபோதும் அவர்களுக்கு தாழ்மை வராது.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பெரிய கடல். அதில் ஆசையுடன் மூழ்கித் தேட ஆரம்பித்தால், முத்துக்கள், ரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும். நாம் அதில் தேடத் தேட வாஸ்துவின் ரகசியங்கள் புரியும். நாமும் அந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப் போம். அதற்கு முன்னர் வாஸ்து பகவானின் கதையைத் தெரிந்து கொள்வோம். வாஸ்து குறித்து வெவ்வேறு கதைகள் சொல்லப்படுவது உண்டு.

வாஸ்து என்பவன் ஓர் அரக்கன். தேவர்களுக்கும் இவனுக்கும் தீராப்பகை. ஒருமுறை, மேலுலகில் நிகழ்ந்த போரின்போது, வாஸ்துவைத் தோற்கடித்த தேவர்கள் அவனை மேலிருந்து கீழே தள்ளிவிட்டனர். பூவுலகில் விழுந்த வாஸ்து, ஈசான்ய பகுதியில் தலைவைத்து பூமியை முழுவதுமாக வியாபித்துப் படுத்தான். அப்போதும் தேவர்கள் அவனை விடுவதாக இல்லை. வாஸ்துவின் பரந்துவிரிந்த அவயவங்களில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டார்கள். இப்படி தேவர்கள் அமர்ந்ததால், வாஸ்துவுக்கு தேவாம்சம் கிடைத்தது; பூஜிக்கத் தகுந்தவர் ஆனார்.
வாஸ்துவின் மேனியில் 53 தேவர்கள் குடிகொண்டுள்ளனராம்.  வாஸ்துபகவானுக்கு கிழக்கு பாகத்தில் சர்வஸ்கந்தன், மேற்கில் ஜ்ரும்பகன், வடக்கில் பிரிபஞ்சன், தெற்கில் அர்யமா, வடகிழக்கில் ஷரகி, தென்கிழக்கில் விதார்யன், வடமேற்கில் பாபராட்சசி, தென்மேற்கில் புனநீகன் ஆகிய எட்டு பேர் குடியிருக்கிறார்கள்.
இவர்களைத் தவிரவும் வாஸ்துவைச் சுற்றி 32 தேவர்களும், வாஸ்துவை ஒட்டிய பகுதிகளில் 12 தேவர்களும், நடுவில் ஒரு தேவருமாக உட்கார்ந்திருக்கின்றனர் என்கின்றன புராணங்கள். ஆக, வாஸ்துவை வழிபடுவதன் மூலம் இந்த 53 தேவர்களையும் திருப்திப்படுத்தி நாம் நலம் பெறலாம் என்பார்கள்.

 வாஸ்து பகவான் குறித்த இன்னொரு கதையையும் அறிந்துகொள்வோம். இந்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள சகல உயிர்களையும் உருவாக்கிய பிரம்மன், புதிதாக ஒரு ஜந்துவையும் படைக்க எண்ணினார். அதன்படியே மிகப்பெரிய ஓர் உயிரியை அவர் சிருஷ்டித்தார். பூமியெங்கும் உலா வந்த அந்த ஜந்து பிரமாண்டமாக வளர்ந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனின் கிரணங்கள் பூமியில் விழாத வண்ணம், அந்த ஜந்துவே முழுவதும் மறைத்து இருந்தது. அதன் அகோரப் பசிக்கு எவராலும் தீனி போட முடியவில்லை. கண்ணில் பட்ட உயிர்களை எல்லாம் பிடித்துத் தின்றது அந்த ஜந்து.இந்த நிலையைக் கண்ட சிவனாரும் விஷ்ணுவும் பிரம்மனிடம் சென்றார்கள். ''பிரம்மதேவனே... பூமியில் உயிர்கள் பல்கிப்பெருகினால்தான் தர்மமும் சாஸ்திரமும் செழித்தோங்கும். ஆனால், நீ சிருஷ்டித்த ஜந்து மற்ற எல்லா உயிர்களையும் அழித்துவிடும் போல் இருக்கிறது. நீ உடனே அதை அடக்கு!'' என்றனர். பிரம்மனும் இசைந்தார். அஷ்டதிக் பாலகர்களையும் அழைத்து, ஜந்துவுடன் போரிட்டு வென்று வாருங்கள் என்று கட்டளையிட்டார்.
அவர்களும் அந்த விநோத ஜந்துவுடன் போரிட்டு வென்றார்கள்.   அந்த ஜந்து மிகவும் சோர்ந்திருந்த நிலையில், அதன் உடலின் மையப் பகுதியில் பிரம்மன் போய் அமர்ந்துகொண்டார். அவரிடம், ''என்னைப் படைத்ததே தாங்கள்தான். இப்போது என்னை அழிக்க முயற்சிப்பதும் நீங்கள்தான். பிறகு ஏன் என்னைப் படைத்தீர்கள்? எனக்கு வாழ்வு கொடுங்கள்'' என்று வேண்டியது ஜந்து.
மனம் இரங்கிய பிரம்மதேவன், ''இன்றிலிருந்து நீ இறவாத தன்மையை அடைவாய். பூமியில் விழுந்த நீ, இந்த பூமியையே ஆக்ரமித்துப் படுத்திரு. இங்கு கட்டடம் கட்ட முனையும் எவரும், உனக்கு உரிய பூஜைகள் செய்து பலி கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்'' என்று அருள் புரிந்தார். அந்த ஜந்துவே வாஸ்து பகவான் என்கிறது இந்தக் கதை

1 comment: