Wednesday, October 31, 2012

பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள் (கருட புராணம்)

பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள்

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ் வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன் என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார்.
                                                 புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார். அப்போது மகா விஷ்ணுவின் உத்திகமலத்தில் நான்முகனாகிய பிரமன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படித்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள். எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவிலை. பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து , அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்.
                   
                      அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும்  மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்தது, யமதர்மனைப் பார்த்து தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும்  ரகைஷயும்  செய்வாயாக! என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தல். கலனும் பிரமனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின்.

           பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச்  செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள்.  மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும். வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள். பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

       கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார்.

No comments:

Post a Comment